Friday, October 24, 2025

காகிதத்தின் வரலாறு

நம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை கண்டறியப்பட்ட விதம், அவை எப்படி நம்மை வந்து சேர்ந்தன என்பதைப் பற்றிய வரலாற்றை நாம்  சிந்திப்பது என்பது மிகவும் அரிது. மனித நாகரிக வளர்ச்சிகளின் கண்டுபிடிப்புகளே இவை. இவையனைத்தும் எத்தனையோ மனிதர்களின் சிந்தனைகளில் பிறந்து, எண்ணங்களில் தவழ்ந்து இன்று நம் முன் பிரகாசிக்கின்றன. அவற்றில் ஒன்றான காகிதத்தின் வரலாற்றை இங்கு காண்போம்.

கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. காகித உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவதாகவும் திகழ்கின்றன.

நவீனகாலக் காகிதத்திற்கு முன்னோடியாக சீனாவில் 2 ஆம் நூற்றாண்டு முதலே காகிதம் பயன்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் காகிதத்தை உருவாக்கினார். சீனாவின் பட்டு ஏற்றுமதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் அதற்கு மாற்றாக சீனர்கள் காகிதத்தைக் கருதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.

காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை உற்பத்தி பெருகியதன் காரணமாக காகிதத்தின் விலை வெகுவாகக் குறைந்தது, இவ்விலைக் குறைவு தகவல் பரிமாற்றத்திற்கும், குறிப்பிடத்தக்க கலாச்சார மாறுதல்களுக்கும் உதவியது. 1844 ஆம் ஆண்டில், கனடியன் கண்டுபிடிப்பாளர் சார்லசு பெனெர்டியும், செருமானியர் கெல்லரும் தனித்தனியாக மரத்தாலான இழைகளை காகிதக்கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர்.

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.

சீனாவில் காகிதம் பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர். சுமேரியர்கள் தங்களது ஆவணங்களை, ஈரமான களிமண் பலகைகளில் எழுத்தாணியால் எழுதி, பின்னர் அதனை தீயில் சுட்டு பாதுகாத்தனர். எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் புல்லிலிருந்து தயாரித்த காகிதத்தில் எழுதினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள். 

பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது, இது கிரேக்க(பப்புரோக்கள்) சொல்லான சைப்பரசு பாப்பிரசு என்ற தாவரத்தின் பெயராகும். சைப்பரசு பாப்பிரசு தாவரத்தின் உட்சோறிலிருந்து பாப்பிரசு தயாரிக்கப்பட்டது. இது தடித்த காகிதம் போன்ற ஒரு பொருள் ஆகும். மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து மற்றும் பிற மத்தியதரைக்கடல் கலாச்சாரங்களில் எழுதுவதற்காக இதைப் பயன்படுத்தியுள்ளனர் . பாப்பிரசு என்ற சொல்லில் இருந்து பேப்பர் என்ற சொல் பிறந்திருந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறைகளும் வெவ்வேறானவையாகும். பாப்பிரசு இயற்கை இழையின் மென்படல உறை போன்றதாகும், ஆனால் காகிதம் இழைகள் மூலம் உருவான மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.

அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன. தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுத்தபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

இந்திய துணைக்கண்டத்தில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் 7 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் முதலில் தோன்றின. அதன் பயன்பாடு 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு சீன புத்த யாத்திரை நினைவுக் குறிப்புகள் மற்றும் சில இந்திய பௌத்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பூசாரிகள் மற்றும் சாதாரண மக்கள் புத்தர் படத்தை பட்டு அல்லது காகிதத்தில் அச்சிட்டு, இந்த படங்களை வணங்குவதைப் பற்றி யிஜிங் எனும் துறவி எழுதினார். அவரது நினைவுக் குறிப்பில், ஐ-சிங் எழுதினார், இந்தியர்கள் தொப்பிகளை உருவாக்கவும், குடைகளை வலுப்படுத்தவும் மற்றும் சுகாதாரத்திற்காகவும் காகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள். 644 கிறிஸ்துவ காலத்தில் (CE) இந்தியாவிலிருந்து 520 கையெழுத்துப் பிரதிகளை சீனாவுக்கு எடுத்துச் சென்றதாக சுவாங்சாங் குறிப்பிடுகிறார், ஆனால் இவற்றில் ஏதேனும் காகிதத்தில் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

15 ஆம் நூற்றாண்டில், சீனப் பயணி மா ஹுவான் வங்காளத்தில் காகிதத்தின் தரத்தைப் பாராட்டினார், இது "ஒரு மரத்தின் பட்டையிலிருந்து" தயாரிக்கப்பட்ட வெள்ளை காகிதம் என்றும் "மான் தோலைப் போல பளபளப்பாகவும் மென்மையாகவும்" இருப்பதாக விவரித்தார். மரப்பட்டைகளை காகிதத்திற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவது, மேற்கு ஆசிய அல்லது மத்திய ஆசியாவை ஆண்ட சுல்தான்களிடமிருந்து  இல்லாமல், நேரடியாக சீனாவிலிருந்து இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வழியே   வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனாவிலிருந்து திபெத் மற்றும் நேபாளம் வழியாக காகிதத் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்திருக்கலாம், புத்த துறவிகள் சுதந்திரமாக பயணம் செய்து, திபெத் மற்றும் இந்தியாவில் உள்ள புத்த மையங்களுக்கு இடையே கருத்துக்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொண்டனர். காகிதத்தில் இருந்து சூத்ரா புத்தகங்களை தயாரிப்பதற்காக துன்ஹுவாங் போன்ற சீன மடாலயங்களால் பின்பற்றப்பட்ட இந்திய தலபத்ரா பிணைப்பு முறைகளால் இந்த பரிமாற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திபெத்திய மடாலயங்களில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான ஆரம்பகால சூத்ரா புத்தகங்கள் இந்திய கையெழுத்துப் பிரதிகளை பிணைக்கும் முறைகளுடன் இணைக்கப்பட்ட சீன காகித துண்டுகளில் உள்ளன. மேலும், இந்த வரலாற்று கையெழுத்துப் பிரதிகளின் மரத்தடி புத்தக அட்டைகளின் பகுப்பாய்வு, இது திபெத்  அல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த வெப்பமண்டல மரத்தால் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர். நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார். நவீன காகிதம் மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காகிதத்தின் வரலாற்றையும் மகிமையையும் சிறிதேனும் தாங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நாளை!?  மற்றுமோர் வரலாற்றின் சுவடுகளில் இணைவோம்!

No comments:

Post a Comment