அன்று சூன் மாதம் அதிகாலை பௌர்ணமிக்கு முந்தைய நாள், குரு பூர்ணிமா விழா மிகச் சிறப்பாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் மிக விமர்சியாக நடந்து கொண்டிருந்தன. பாலா, தூக்கத்திற்கும் அவன் அம்மாவின் எழு குரலிற்கும் நடுவே போராடிக்கொண்டிருந்தான். வீட்டில் அனைத்து வேலைகளும் முடியும் நிலையில் உள்ளன இன்னும் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய் என அவன் பாட்டியின் குரல், கனவில் மிதந்து கொண்டிருக்கும் அவன் காதில் மிகவும் சிரமப்பட்டு நுழைந்தது, மெதுவாகக் கண்களைத் திறந்து குளியல் அறைக்குள் நுழைந்து, தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டான், இடையில் அவன் அம்மா அழைக்கவே அப்படியே விட்டுவிட்டு சென்றவன் வருவதற்குள் இங்கு தண்ணீர் வெகுவாக வழிந்தோடியது, எதேர்சையாக அந்த பக்கம் வந்த அவனது பாட்டி, குழாயை நிறுத்தி விட்டு பாலாவை அழைத்து, "என்ன இது, இப்படித்தான் நீரை வீணாக்குவதா? குழாயை நிறுத்தி விட்டு சென்றிருக்கலாம் அல்லவா, இனிமேல் இவ்வாறு செய்யாதே", என்று இவனை கடிந்து கொண்டார். பாலாவும், "சரி பாட்டி" என்று ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்று சொல்லி விட்டு தயாராகச் சென்றான்.
அனைவரும் தயாரானதும், வீட்டில் இறைவழிபாட்டை முடித்துவிட்டு, உணவருந்தி விட்டு , ஓர் பயணத்திற்குத் தயாரானார்கள். பாலா, 8ம் வகுப்பு படிக்கும் சிறு மாணவன், இவனது குடும்பம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள, ஜெய்ப்பூரில் வசித்து வருகின்றனர், இவனது தாய் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை வட இந்தியாவைச் சேர்ந்தவர். இவர்கள் ராஜஸ்தானில் குடியேறி நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இது இவனது தாத்தாவின் பூர்விக இடம் என்பதால், இவர்கள் இங்கேயே தங்கி விட்டனர். ஒவ்வொரு வருடமும் குரு பூர்ணிமாவிற்கும் இவர்கள் சிந்து நதியை வழிபட லடாக்கில் உள்ள இவர்களது பெரிய பாட்டியின் வீட்டிற்கு செல்வது வழக்கம், ஆனால், தொடர்வண்டி, பேருந்தில் செல்ல ஒரு நாளுக்கு மேல் ஆகும் என்பதால் இவர்கள் டெல்லிக்கு வானூர்தியில் சென்று அங்கிருந்து மீண்டும் ஒரு வானூர்தியில் லடாக்கை அடைந்தனர்.
சிந்து நதி, இது ஆசியாவின் நீண்ட ஆறுகளில் ஒன்றாகவும், பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகவும் உள்ளது. இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றும் இந்த ஆறு, லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர், மற்றும் பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வழியாகவும் பின் பஞ்சாப்பில் பாய்ந்து சென்று இறுதியில் சிந்து பகுதியின் தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. இது பாக்கிஸ்தானின் மிக நீண்ட ஆறு மற்றும் தேசிய நதி ஆகும். இதில் ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் உலகில் இருபத்தோராவது பெரிய ஆறாக உள்ளது. சிந்துவின் முதன்மையான நீர் ஆதாரம் திபெத்தில் உள்ளது; திபெத்தில் தோன்றிய சிந்து ஆறு, பின்னர் லடாக் மற்றும் பால்டிஸ்த் வழியாக வடமேற்குப் பகுதியில் காரகோரம் மலைக்கு தெற்கே கில்கித் நோக்கி செல்கிறது. உலகின் சில நதிகளில் மட்டுமே காணப்படும் ஒன்றான கழிமுக அலைஏற்றம் சிந்து ஆற்றில் காணப்படுகிறது. இதன் நீராதாரமானது திபெத், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் பாக்கிஸ்தானின் வடக்கு நிலங்கள் ஆகியபகுதிகளிலும், இமயமலை காரகோரம், இந்து குஷ் ஆகிய மலைகளில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகளில் இருந்து கிடைக்கிறது. ஆற்றின் நீர்பெருக்கானது பருவ காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது - குளிர்காலத்தில் நீர் பெரிதும் குறைந்து காணப்படும், சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழைக்காலத்தில் வெள்ளம் மிகுந்து காணப்படும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து ஆற்றின் போக்கில் நிலையான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கும் மற்றும் பல அன்றாடத் தேவைகளுக்கும் நீர் இன்றியமையாத ஒன்றாகிறது. அந்நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் கொண்டாடுவதே இந்தத் திருவிழா. சிந்து நதி, நாட்டின் மிக நீளமான நதியாகவும், பல்வேறு நாட்டிற்கு நன்மை பயப்பதாகவும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பல காலகட்டத்தில் பாய்ந்து நன்மை பயப்பதாகவும் உள்ளது. எனவே இந்நதிக்கரையில் தீபம் ஏற்றி ,வண்ண மலர்களைச் சூட்டி, பல்வேறு வாணவேடிக்கைகள் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாலாவின் குடும்பம் லடாக்கைச் சென்றடைய அன்று இரவாகி விட்டது. எனவே அவர்கள் உணவருந்தி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டனர். அடுத்த நாள் விழா கோலாகலமாக ஆரம்பித்தது, அருகிலுள்ள சிவன் கோவிலில் கடவுளை வழிபட்டுவிட்டு, ஆற்றில் தீபங்களை ஏற்று மிதக்க விட்டு, நீருக்கு நன்றி செலுத்தினர். பிறகு அங்கு ஓடும் சிந்து நதியின் ஓர் சிறு ஓடையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
இமய மலையில் உற்பத்தியாகி வரும் இந்நீரின் நிறம் அவை கடந்து வரும் பாதைகளின் நிறங்களை அழகாகப் பிரதிபலித்தது. உயரமான மலைச் சிகரங்களுக்கு நடுவே, வெள்ளி ஓடையென பாயும் இந்நதியின் சலசலப்புகளுக்கு இடையே அலைபாயும் மனமும், அதன் அமைதியில் அடங்கும் மனமும் இன்னும் சுவாரசியமாகவே இருந்தது. பாலா, நதியின் ஒரு கரையோரமாக கால்களை நதியில் விட்டபடி அவ்வப்போது அவன் பாதைகளைத் தொட்டுச் செல்லும் மீன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது பாட்டியும் அவனோடு சேர்ந்து கொண்டார், அவர் ஏதோ கேட்க, பாலா எதுவும் பேசாமல் ஓர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அறிந்த அவர், "பாலா!, என்ன சிந்தனையில் உள்ளாய்?" என்று சற்று உரத்தக் குரலில் கேட்க, கற்பனை உலகிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான், பாலா. தனது கேள்விகளுக்கு பாட்டியிடம் பதில் இருக்கலாம் என்றுணர்ந்த அவன், "பாட்டி, பெரும்பாலும் நதிகள் மழை மேகங்களிலிருந்து பூமிக்கு வந்து அவை பல்வேறு கிளைகளாகப் பிரிந்து மக்களுக்கு பயனளிக்கின்றன என்று நான் படித்திருக்கிறேன், ஆனால், வறட்சி காலங்களில் மழைப் பொழியா விட்டால் இவர்கள் நீராதாரத்திற்கு என்ன செய்வார்கள்?" என்று கேட்டான். பாட்டி, சிறு புன்னகையோடு பதிலளித்தார், நீரை அணைகள் கட்டியும், சிறு ஏறி குளங்களை உருவாக்கியும் சேமிப்பார்கள், வறட்சி காலங்களில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வர், ஆனால், கிராமப் புறங்களை விட, நகர்ப்புறங்களில் நீர் அதிகமாக, தேவையையும் தாண்டி செலவழிக்கப் படுகிறது, இவை வறட்சிக் காலங்களில் நகர்ப்புறங்களை மட்டுமல்லாது, இந்த நதிகளின் நீரையே நம்பி வாழும் இக்கிரமங்களின் நீராதாரத்தையும் பாதிக்கின்றது. என்று பாலாவின் பாட்டி சொல்லி முடிக்கையில், அவனது மனது நேற்று அதிகாலை, குளிப்பதற்காக குழாயைத் திறந்து விட்டு சரியான நேரத்தில் மூடாமல், வீணாகிய நீரை எண்ணி சற்றே வேதனைக் கொண்டது. தான் செய்தது தவறு, இனி இவ்வாறு நீரை எந்த சூழலிலும் வீணாக்க கூடாது என்று அவன் உணர்ந்தான். நாம் இன்று வீணாக்கும் சிறு துளி நீர் கூட முகமறியா மனிதர்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்தான்.அன்றிலிருந்து நீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும், தேவையில்லாமல் வீணாக்க கூடாது என்றும் தனது பள்ளியில் நடக்கவிருக்கும் பேச்சுப்போட்டியில் நீரை மையமாகக் கொண்டு உரையாற்ற வேண்டுமென்று முடிவு செய்தான்..
பாலா இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையில், அவனது பாட்டி ஏதோ சொல்ல முற்படுவதை உணர்ந்தான். "பாலா, நம் வாழ்க்கையும் ஒரு நதி போன்றதே, நதி எவ்வாறு தனது பாதையில் வரும் வளைவு நெளிவுகளுக்கேற்ப தனது போக்கை மாற்றிக்கொள்கிறதோ, பாதையின் வரும் தடைகளை எவ்வாறு புத்துணர்ச்சியோடும், விடாமுயற்சியோடும் எதிர்த்து கடந்து செல்கிறதோ, அவ்வாறு நாமும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உருவமற்ற நீர், அது பயணிக்கும், சேரும் இடத்தைப் பொறுத்தே உருவம் பெறுகிறது, அதுபோல், நீ உன் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களைக் கடந்து செல்ல பழகிக்கொள், ஆனால், ஒவ்வொருவரிடமும் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு செய்தியாவது இருக்கும் என்பதை என்றும் மறவாதே. வண்ணமற்ற, தூய்மையான நீரைப்போல், எப்பொழுதும் உனது மனதை வைத்திரு, அப்பொழுது இந்த நதியின் தேடலைப் போல், உன் வாழ்விற்கானத் தேடலை நீ எளிதில் கண்டடைவாய்! " என்று பாட்டி தனது அனுபவங்களை உரைக்க, அசையா ஜோதியாய் அவனது மனம் அதை உள்வாங்கியதை அவன் உணர்ந்தான்!
இந்த குரு பூர்ணிமா நான்னாளில், தனது பாட்டியே தனக்கு ஓர் குருவாய் தெரிந்ததைக் கண்டு மகிழ்வுற்றான்! இங்கு தனது பாட்டி மட்டும் குருவல்ல, மலைச்சிகரங்களும், வானைப் பிரதிபலிக்கும் தெளிவான நீரோடையும், அமைதியான வானமும், சுற்றியிருக்கும் அனைவருமே தனக்கு ஓர் குருவாக இருப்பதை உணர்ந்தான்! இயற்கையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். மகிழ்வோடு அவர்கள் இருவரும் நதிக்கும், இயற்கைக்கும் மேலும் சில மலர்களைத் தூவி நன்றி கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர்.
நம் மனதில் அனுபவமும், மாற்றமும் எந்த நிலையிலும், யார் வழியாகவும் நிகழலாம், அதற்கு என்றுமே உங்களை தயார் நிலையில் வைத்திருங்கள்!
நதியின் பயணம் தொடரும்...