Sunday, October 26, 2025

குமரிக்கண்டம் முதல் கல்கி அவதாரம் வரை — தமிழரின் யுக சிந்தனை

தமிழ் நாகரிகம் உலகின் மிகப் பழமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியங்கள், சித்த நூல்கள், புராணங்களின் புனித தத்துவங்கள் அனைத்தும், மனித வாழ்க்கை ஒரு சுழற்சி எனவும், உலகம் அழிந்து மீண்டும் உருவாகும் எனவும் கூறுகின்றன. இதே சிந்தனைவே வேத மற்றும் விஷ்ணு புராணங்களிலும் “யுக சுழற்சி” என விளங்குகிறது.

மூன்று சங்கங்கள் மற்றும் குமரிக்கண்டம்

தமிழ் மரபு கூறும் மூன்று சங்கங்கள்:

  1. முதல்சங்கம் (குமரிக்கண்டத்தில்)
  2. இடைச்சங்கம் (கடலில் ஒரு பகுதி மூழ்கியபின்)
  3. கடைச்சங்கம் (மதுரையில்)

இந்த சங்கங்கள் கூறுவது, உலகம் பலமுறை “பிரளயம்” அடைந்து மீண்டும் உயிர் பெறுகிறது. கடல் உயர்வால் நிலம் மூழ்கி, நாகரிகம் அழிந்தது; பின்னர் மீண்டும் புதிய நாகரிகம் உருவானது.

இது வேதங்களில் வரும் “பிரளயம்” (மகா பிரளயம்) என்ற கருத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறது.

வேதங்களும் புராணங்களும் கூறுவது:

ரிக் வேதம், பாகவத புராணம், விஷ்ணு புராணம் போன்றவை பின்வருமாறு  கூறுகின்றன:

உலகம் நான்கு யுகங்களில் சுழல்கிறது:

சத்ய, த்ரேதா, துவாபர, கலி.

கலியுகம் முடிவில்:

கல்கி அவதாரம் தோன்றி, அநியாயம், அக்கிரமம் அனைத்தையும் அழித்து, புதிய சத்யயுகத்தை ஆரம்பிப்பார்.”

— (பாகவத புராணம் 12.2.18–20)

அந்த காலத்தில் மனிதர்கள் ஆசை, பொய், வஞ்சகம், பாவம் ஆகியவற்றால் மூழ்கி இருப்பார்கள். விஷ்ணுவின் ஒளி வடிவம், கல்கி — வெண்குதிரையில் வருவார், தர்மத்தை மீட்டெடுப்பார்.

தமிழ் நூல்களின் சிந்தனை:

திருமந்திரம் கூறுகிறது:

அறம் குறையும் போது உலகம் குறையும்;

அறம் உயரும் போது உயிர் உயரும்.”

இது யுக சுழற்சியின் அடிப்படை விதி. அறம் (தர்மம்) வீழ்ந்தால் கலி, உயர்ந்தால் சத்யயுகம்.

திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவை விஷ்ணுவின் அவதாரங்களைப் போற்றி, ஒவ்வொரு யுகத்திலும் அவர் தர்மத்தை நிலைநிறுத்த வந்ததாக கூறுகின்றன.

ஆழ்வார்கள் பாடிய தசாவதார ஸ்தோத்திரங்கள் தமிழ் வழியாகவே வேத சிந்தனையை மக்களிடம் கொண்டு வந்தன.

குமரிக்கண்டம் புராணம் மற்றும் சில சங்கக் கதைகள் யுக மாற்றம் பற்றிக் கூறுவது:

கடல் உயர்வால் உலகம் மூழ்கும்.அதன்பின் மீண்டும் நிலம் பிறக்கும். மனிதர்கள் புதிய வழியில் மீண்டும் வாழ்வார்கள்.

இது பிரளயம் — மறுபிறப்பு — தர்ம சுழற்சி என்ற வேதப் பின்புல சிந்தனையுடன் இணைகிறது.

தமிழர்கள் அதனை “பூமி புதிதாகப் பிறப்பது” எனக் கூறினர்.

கல்கி அவதாரம் — தமிழ் பார்வையில்:

ஆழ்வார்கள், சித்தர்கள், திருமூலர் போன்றோர் கூறுவது:

யுகங்கள் மாறும்; தெய்வ அவதாரம் வரும்;

அவன் தர்மம் மீட்டெடுப்பான்.”

சித்தர்கள் பலர் கலியுகத்தின் முடிவில் மனித ஆன்மா விழித்தெழும் என குறிப்பிடுகின்றனர்.

அது கல்கி தத்துவத்தின் ஆன்மீக வடிவம், வெளியில் வரும் வீர அவதாரம், உள்ளே எழும் ஞான அவதாரம்.

தமிழர் மரபும், வேத மரபும் வேறுபட்ட பாதையில் நடந்தாலும், இரண்டிலும் ஒரு ஒற்றுமை உண்மை நிலவுகிறது.

தர்மம் வீழ்ந்தால் தெய்வம் அவதரிக்கிறது; பிரளயம் முடிந்தால் பூமி மீண்டும் மலர்கிறது.

அதுவே, குமரிக்கண்டத்தின் சிந்தனையிலும், வேதத்தின் கல்கி அவதாரத்திலும் நாம் உணரும் ஓர் உண்மையான மையக் கருத்து!

புராணங்கள் மற்றும் தமிழகத்தின் வரலாற்று இணைநிலை

இந்திய நாகரிகத்தின் ஆன்மிக வரலாற்றைச் சொல்லும் முக்கிய நூல்களில் ஒன்று புராணங்கள். இவை வேதங்களுக்குப் பிறகு வந்த, மக்களின் வாழ்க்கை, மதம், யுக சுழற்சிகள், அவதாரங்கள் ஆகியவற்றை எளிதாக விளக்கும் கதை வடிவ நூல்கள்.
பெரும்பாலான புராணங்களை வேத வியாசர் தொகுத்தார் எனக் கூறப்படுகிறது.
இவை கிமு 500 முதல் கிபி 1000 வரை பல கட்டங்களாக எழுதப்பட்டு வளர்ந்தன.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் வடஇந்தியாவில் புராணங்கள் உருவாகிக் கொண்டிருந்தபோது, தென்னிந்தியாவின் தமிழகம் பெரும் அரசியல், இலக்கிய, ஆன்மிக வளர்ச்சியை அனுபவித்தது.
இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது, பண்டைய இந்திய நாகரிகத்தின் முழுமையான படிமம் வெளிப்படும்.

கிமு 500 – கிபி 300 : சங்ககாலம் மற்றும் புராணங்களின் ஆரம்பம்

இந்தக் காலத்தில் வடஇந்தியாவில் புராணக் கதைகள் வாய்மொழியாக பரவிக் கொண்டிருந்தன. சமுதாயம் வேதங்களிலிருந்து மக்கள் வாழ்க்கை நோக்கமாக மாறிய காலம்.

தமிழகத்தில் இதே சமயத்தில்:

  • சேரர், சோழர், பாண்டியர் ஆட்சி செய்தனர்.
  • மதுரை, உரையூர், வஞ்சிநகர் போன்ற நகரங்கள் வளர்ந்தன. 
  • அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்கள் எழுந்தன. 
  • கவிஞர்கள் இயற்கை, காதல், வீரம், அரசன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கவிதைகள் படைத்தனர்.
இந்தக் காலம் தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் செழித்து வளர்ந்த முதற்பெரும் யுகம் ஆகும். வடத்தில் உருவான புராணக் கதைகளும், தென்னில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களும் இரண்டும் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

புராணங்களில் விவரிக்கப்பட்ட விஷ்ணுவின் அவதாரங்கள், தர்மம், உலகச் சுழற்சி போன்ற கருத்துகள் தமிழகக் கோவில்களின் சிற்பங்களிலும் காணப்படுகின்றன. இதனால் வடக்கும் தெற்கும் ஆன்மிகக் கலாச்சாரத்தை பரிமாறிக் கொண்டன.

கிபி 600 – 900 : பக்தி இயக்கம் மற்றும் பாகவத காலம்

இந்தக் காலத்தில் வடஇந்தியாவில் பாகவத புராணம், ஸ்கந்த புராணம், லிங்க புராணம் போன்றவை எழுதப்பட்டன.
இவை விஷ்ணு, சிவ வழிபாட்டை மையமாகக் கொண்ட பக்தி நூல்களாகும்.

தமிழகத்தில் அதே சமயம்:

  • நாயன்மார்கள், ஆழ்வார்கள் எழுச்சி பெற்றனர்.
  • தேவரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவை தோன்றின.
  • மக்களிடம் தர்மம், அன்பு, பக்தி ஆகியவை பரவியன.
  • சைவம், வைணவம் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, தமிழகத்தில் பக்தி இயக்கம் வேரூன்றியது.

இதன் மூலம் வட இந்திய புராணங்கள் கூறிய பக்தி தத்துவம், தமிழில் பாட்டாக, உணர்வாக, வாழ்க்கையாக வெளிப்பட்டது.

கிபி 900 – 1000 : சோழர் பேரரசு மற்றும் புராணங்களின் இறுதி வடிவம்

இந்தக் காலம் வட இந்தியாவில் அக்னி புராணம், ப்ரம்மாண்ட புராணம் போன்ற நூல்கள் இறுதி வடிவம் பெற்றது.
புராணங்களில் உலகச் சுழற்சி, கல்கி அவதாரம், தர்ம நாசம், மறுபிறப்பு ஆகிய கருத்துகள் வலுப்பெற்றன.

தமிழகத்தில் இதே நேரத்தில்:

  • சோழர் பேரரசு எழுச்சி பெற்றது.
  • விஜயாலய சோழன், அதித்ய சோழன், பராந்தக சோழன் ஆகியோர் ஆட்சியில் கலை, கல்வி, மதம் செழித்தது.
  • கோவில் கட்டிடங்கள், கலைச்சிற்பங்கள், வேத பாடசாலைகள் உருவாயின.
  • மதுரை, காஞ்சி, திருச்சி ஆகியவை கல்வி மையங்களாக வளர்ந்தன.

இந்தக் காலம் தமிழ்நாட்டின் “பெரிய நாகரிக மறுபிறப்புக் காலம்” எனச் சொல்லலாம்.
வட இந்திய புராணங்கள் சொன்ன “தர்மம் மீண்டும் எழுச்சி பெறும்” கருத்து,
தமிழகத்தில் நிஜமாக நடந்தது.

புராணங்கள் எழுதப்பட்ட வட இந்திய காலம்,தமிழகத்தில் பக்தி, இலக்கியம், கலை ஆகியவற்றின் பொற்காலமாக இருந்தது.

வட இந்தியா தத்துவத்தை உருவாக்கியபோது, தமிழகம் அதை வாழ்வாக மாற்றியது. இரண்டும் சேர்ந்து இந்திய ஆன்மிக நாகரிகத்தின் இரு பக்கங்கள் ஆனது.

புராணங்கள் சொல்லும் தர்ம சுழற்சி, அவதாரம், பக்தி ஆகிய கருத்துகள் தமிழ் இலக்கியத்திலும், கோவில்களிலும், மக்களின் நம்பிக்கையிலும் நன்கு பதிந்துள்ளன.

அதனால், புராணங்களின் காலம் என்பது, தமிழ்நாட்டின் கலாச்சார மறுமலர்ச்சியின் பொற்காலமும் ஆகும்.

Friday, October 24, 2025

காகிதத்தின் வரலாறு

நம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை கண்டறியப்பட்ட விதம், அவை எப்படி நம்மை வந்து சேர்ந்தன என்பதைப் பற்றிய வரலாற்றை நாம்  சிந்திப்பது என்பது மிகவும் அரிது. மனித நாகரிக வளர்ச்சிகளின் கண்டுபிடிப்புகளே இவை. இவையனைத்தும் எத்தனையோ மனிதர்களின் சிந்தனைகளில் பிறந்து, எண்ணங்களில் தவழ்ந்து இன்று நம் முன் பிரகாசிக்கின்றன. அவற்றில் ஒன்றான காகிதத்தின் வரலாற்றை இங்கு காண்போம்.

கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. காகித உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவதாகவும் திகழ்கின்றன.

நவீனகாலக் காகிதத்திற்கு முன்னோடியாக சீனாவில் 2 ஆம் நூற்றாண்டு முதலே காகிதம் பயன்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் காகிதத்தை உருவாக்கினார். சீனாவின் பட்டு ஏற்றுமதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் அதற்கு மாற்றாக சீனர்கள் காகிதத்தைக் கருதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.

காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை உற்பத்தி பெருகியதன் காரணமாக காகிதத்தின் விலை வெகுவாகக் குறைந்தது, இவ்விலைக் குறைவு தகவல் பரிமாற்றத்திற்கும், குறிப்பிடத்தக்க கலாச்சார மாறுதல்களுக்கும் உதவியது. 1844 ஆம் ஆண்டில், கனடியன் கண்டுபிடிப்பாளர் சார்லசு பெனெர்டியும், செருமானியர் கெல்லரும் தனித்தனியாக மரத்தாலான இழைகளை காகிதக்கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர்.

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.

சீனாவில் காகிதம் பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர். சுமேரியர்கள் தங்களது ஆவணங்களை, ஈரமான களிமண் பலகைகளில் எழுத்தாணியால் எழுதி, பின்னர் அதனை தீயில் சுட்டு பாதுகாத்தனர். எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் புல்லிலிருந்து தயாரித்த காகிதத்தில் எழுதினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள். 

பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது, இது கிரேக்க(பப்புரோக்கள்) சொல்லான சைப்பரசு பாப்பிரசு என்ற தாவரத்தின் பெயராகும். சைப்பரசு பாப்பிரசு தாவரத்தின் உட்சோறிலிருந்து பாப்பிரசு தயாரிக்கப்பட்டது. இது தடித்த காகிதம் போன்ற ஒரு பொருள் ஆகும். மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து மற்றும் பிற மத்தியதரைக்கடல் கலாச்சாரங்களில் எழுதுவதற்காக இதைப் பயன்படுத்தியுள்ளனர் . பாப்பிரசு என்ற சொல்லில் இருந்து பேப்பர் என்ற சொல் பிறந்திருந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறைகளும் வெவ்வேறானவையாகும். பாப்பிரசு இயற்கை இழையின் மென்படல உறை போன்றதாகும், ஆனால் காகிதம் இழைகள் மூலம் உருவான மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.

அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன. தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுத்தபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

இந்திய துணைக்கண்டத்தில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் 7 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் முதலில் தோன்றின. அதன் பயன்பாடு 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு சீன புத்த யாத்திரை நினைவுக் குறிப்புகள் மற்றும் சில இந்திய பௌத்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பூசாரிகள் மற்றும் சாதாரண மக்கள் புத்தர் படத்தை பட்டு அல்லது காகிதத்தில் அச்சிட்டு, இந்த படங்களை வணங்குவதைப் பற்றி யிஜிங் எனும் துறவி எழுதினார். அவரது நினைவுக் குறிப்பில், ஐ-சிங் எழுதினார், இந்தியர்கள் தொப்பிகளை உருவாக்கவும், குடைகளை வலுப்படுத்தவும் மற்றும் சுகாதாரத்திற்காகவும் காகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள். 644 கிறிஸ்துவ காலத்தில் (CE) இந்தியாவிலிருந்து 520 கையெழுத்துப் பிரதிகளை சீனாவுக்கு எடுத்துச் சென்றதாக சுவாங்சாங் குறிப்பிடுகிறார், ஆனால் இவற்றில் ஏதேனும் காகிதத்தில் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

15 ஆம் நூற்றாண்டில், சீனப் பயணி மா ஹுவான் வங்காளத்தில் காகிதத்தின் தரத்தைப் பாராட்டினார், இது "ஒரு மரத்தின் பட்டையிலிருந்து" தயாரிக்கப்பட்ட வெள்ளை காகிதம் என்றும் "மான் தோலைப் போல பளபளப்பாகவும் மென்மையாகவும்" இருப்பதாக விவரித்தார். மரப்பட்டைகளை காகிதத்திற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவது, மேற்கு ஆசிய அல்லது மத்திய ஆசியாவை ஆண்ட சுல்தான்களிடமிருந்து  இல்லாமல், நேரடியாக சீனாவிலிருந்து இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வழியே   வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனாவிலிருந்து திபெத் மற்றும் நேபாளம் வழியாக காகிதத் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்திருக்கலாம், புத்த துறவிகள் சுதந்திரமாக பயணம் செய்து, திபெத் மற்றும் இந்தியாவில் உள்ள புத்த மையங்களுக்கு இடையே கருத்துக்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொண்டனர். காகிதத்தில் இருந்து சூத்ரா புத்தகங்களை தயாரிப்பதற்காக துன்ஹுவாங் போன்ற சீன மடாலயங்களால் பின்பற்றப்பட்ட இந்திய தலபத்ரா பிணைப்பு முறைகளால் இந்த பரிமாற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திபெத்திய மடாலயங்களில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான ஆரம்பகால சூத்ரா புத்தகங்கள் இந்திய கையெழுத்துப் பிரதிகளை பிணைக்கும் முறைகளுடன் இணைக்கப்பட்ட சீன காகித துண்டுகளில் உள்ளன. மேலும், இந்த வரலாற்று கையெழுத்துப் பிரதிகளின் மரத்தடி புத்தக அட்டைகளின் பகுப்பாய்வு, இது திபெத்  அல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த வெப்பமண்டல மரத்தால் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர். நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார். நவீன காகிதம் மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காகிதத்தின் வரலாற்றையும் மகிமையையும் சிறிதேனும் தாங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நாளை!?  மற்றுமோர் வரலாற்றின் சுவடுகளில் இணைவோம்!

Saturday, October 4, 2025

கார்கால மேகங்கள்!

சில்லென்ற சாரல் சாளரத்தின் வழியே தேகத்தை வருட, பல ராகங்களோடு வானம்பாடிகள் வானெங்கும் வலம்வர, மேகங்களோடு முட்டி மோதிக்கொண்டு தனது வருகையை பூமிக்கு தெரிவிக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஆதவனின் சில ஒளிக்கற்றைகள் அந்த விடுதியின் முன்னே பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களின் மீது பட்டு, காணும் திசையெங்கும் இயற்கை தன்னை ஆசிர்வதிப்பதைப் போன்ற ஓர் காட்சி;  இவற்றையெல்லாம் அமைதியாக சாளரத்தின் வழியே ரசித்தபடி எங்கோ தயாராகிக் கொண்டிருந்தாள், பார்வதி! அப்பொழுது அவளது கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது, இன்னும் சில நாட்களுக்கு மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இன்று நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு இன்னும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படுகிறது, தாங்கள் தற்பொழுது தங்கியுள்ள அறைகளிலேயே தங்கிக்கொள்ளலாம். இந்த உரையாடல் நடந்து முடிவதற்குள்ளேயே, வானெங்கும் இருள் மேகங்கள் சூழ்ந்து காலைப் பொழுது இரவுபோலானது. இந்த மாற்றங்கள் பார்வதிக்குப் புதிது, ஆனால் இந்த இடத்திற்குப் புதிதல்ல. ஆம், தற்பொழுது இவள் இருப்பது உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடமான இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் மௌசின்ரம்  மலைப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தான்.

மௌசின்ரம் என்பது மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைகளைக் கொண்ட மாவட்டத்திலுள்ள ஊராகும். இதுவே உலகின் அதிகமான சராசரி ஆண்டு மழைப்பொழிவைக் கொண்ட இடமாகும். இங்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 11,872 மிமீ மழை பெய்கின்றது. இது முன்பு அதிக சராசரி மழையைப் பெற்ற இடமான சிரபுஞ்சியிலிருந்து 16 கிமீ மேற்கே உள்ளது.இது 1400 மீட்டர்கள் உயரமான மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமமாகும்.19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. 2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா என்று மாற்றியது. அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருகிறது. சோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது. சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.


காலநிலை மாநாடு தள்ளிவைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பார்வதி சற்றே மாறுபட்ட மனநிலையில் இருந்தால், ஏனென்றால் இங்கு எப்பொழுது மழை நிற்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூட சரியாக கணிக்க இயலாது. தான் திரும்பி வர இன்னும் சில நாட்களாகும் என்ற செய்தியை தனது வீட்டிற்கு தெரிவித்துவிட்டு, காலை உணவை உட்கொள்ள உணவு வழங்கும் இடத்திற்கு சென்றாள். அந்தப் பகுதி மக்களால் அதிகம் விரும்பி உண்ணும் உணவான காரமான இறைச்சி மற்றும் மீன் தயாரிப்புகளுடன் கூடிய சாதத்தையும் சிறிது உட்கொண்டாள். பின்பு, தனது அறை நோக்கி செல்லும் வழியிலுள்ள மண்டபத்தில், அதே மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் ராகவ், டெங் என்னும் இரு நபர்களை சந்தித்தாள்.  குறைந்தது மூன்று நாட்கள் மிக கன மழை இடைவிடாமல் பெய்யும் என்பதால் என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். பார்வதி, தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், பணியின் காரணமாக நகர்புறத்தில் வசித்து வருகிறாள். அவள் மழைக்காலத்தைப் பற்றிய அவளது அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்கிறாள்.

(குறிப்பு: அவர்களின் உரையாடல் தமிழில்)

பார்வதி:

மழைக்காலம் என்றாலே பொதுவாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், வானெங்கும் கார்மேகம் சூழ்ந்து, இடி மின்னலுடன் தேவர்கள் பூமிக்கு அளித்த பரிசாக எங்கும் ஆனந்தமாக இருக்கும். பள்ளிக் கல்லூரிகளுக்கும், அவ்வப்போது அலுவலகங்களுக்கும் விடுமுறை கிடைக்கும், அனைவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பல கதைகள் பேசுவோம், அம்மா சூடாக பலகாரங்கள் செய்து தருவார், சிறு சிறு விளையாட்டு, பெற்றோருக்கு தெரியாமல் மழையில் நனைவது, நண்பர்களுடன் கடந்தகால நினைவுகளை பரிமாறிக்கொள்ளவது என்று நாட்கள் அழகாக செல்லும். வயல்களில் பயிர்களை நட்டு மழைக்காக காத்திருக்கும் உழவர்களுக்கு இந்த காலம் மிகவும் பொற்காலம் என்றே சொல்லலாம். வறண்ட நதி, ஓடை, ஆறு, ஏறி, குளம் எங்கும் நீர்cநிறைந்து அனைத்து உயிர்களும் மகிழ்வாக மழைக்காலத்தை வரவேற்போம். இதுவே, சில சமயங்களில் மழை விடாமல் இரு வாரங்களுக்கு மேல் பெய்தால் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும். அன்றாட தேவைகளுக்கே வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை, மிகுந்த மழையால் வெள்ளம், பயிர் சேதம், மலைச்சரிவு, மரம் விழுதல் போன்றவையும், நெசவு, கட்டிடம் கட்டுதல் போன்ற பல்வேறு தொழில் செய்வோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும், பல்வேறு இன்னல்களையும் சந்திக்க நேரிடும். இவ்வாறு, மழையின் இரு முகங்களையும் கிராம வாழ்க்கையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், நகர்ப்புற வாழ்க்கை முறை மழைக்காலங்களில்  மிகவும் மாறுபட்டே காணப்படுகிறது. வருடத்தின் சில நாட்களில் மழைப் பொழிந்தாலும், அனைத்து பகுதிகளையும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதால் சிறு அளவு மழைப்பொழிவு கூட மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெருகிவரும் நீர் வெளியே செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே உள்ள குழிகளில் நிரம்பி தொற்றுகளையும் ஏற்படுத்துகிறது. இவை தானாக வற்றுவதற்கு பல நாட்களாகிறது, இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், குடியிருப்புகள், கடைகள் மற்றும் பல கட்டிடங்கள் ஏரிக்கரையோரம் கட்டப்படுவதாலும் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதிலும், புயல், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில், மின்சாரம், உணவு, தண்ணீர், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளே கிடைக்காமல் அல்லல்படும் மக்களே இங்கு அதிகம். அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பல்வேறு சமூக நல அமைப்புகள், தனி மனிதர்கள் என அனைவரும் உதவினாலும், இவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. நகர்ப்புற மக்களும் மழையை ரசிக்க, அந்த காலகட்டத்தை அனுபவிக்கவே விரும்புகிறார்கள், ஆனால், இது போன்ற சூழ்நிலை, அவர்களுக்கு மழையின் மேல் சிறு வெறுப்பை திணிக்கின்றது. எனினும், சிறு குழந்தைகள் அனைத்தையும் மறந்து, மழையை கொண்டாடவே செய்கின்றனர்.

இவ்வாறு, மழைக்காலங்கள் மக்களின் வாழ்விடத்தையும், சுற்றுப்புறத்தையும் மற்றும் பல்வேறு காரணிகைளையும் கொண்டு பல மாறுபட்ட உணர்வுகளை மக்களின் மனதில் விதைக்கிறது; என்று, பார்வதி தனது வாழ்க்கை அனுபவத்தை, இரு நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டாள். இவற்றையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த அவளது நண்பர்களில் ஒருவரான டெங் -ன்  மனதில் பல நினைவலைகள் தவழ்ந்து சென்றன.

டெங், இவர் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள ஏழாவது பெரிய நாடான மாலியில் அரௌனே அல்லது அரவான் என்ற பெயர் கொண்ட சகாராபாலைவனத்தின் ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த கிராமம் ஒரு காலத்தில் சகாரா வர்த்தகத்தில் ஒரு நிறுவனமாக செயல்பட்டது. 

டெங்:

சகாரா, ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா போன்ற பலப் பகுதிகளைஉள்ளடக்கியது. இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன.இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா என்பதில் இருந்து எழுந்ததாகும். மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சகாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சகாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன.இப்போதய சகாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது.நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது.வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் வருடாந்திர மழையைப் பெறுகின்றது.பருவகால அளவின் படி, சகாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ  வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது, மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது.

கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சகாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.சகாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சகாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.சகாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சகாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். இதன் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர். இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 


இந்த சகாரா பாலைவனத்திலுள்ள ஒரு சிறு கிராமமான அரௌனேவில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். இங்கு வாழ்க்கை முறை மிகவும் கடினமானது. இதைச் சுற்றியுள்ள பாலைவனம் முற்றிலும் தரிசாக உள்ளது, மழைப்பொழிவு எந்த விவசாயத்தையும் அனுமதிக்க முடியாத அளவுக்கு குறைவாக உள்ளது மற்றும் கிராமம் கேரவன் வர்த்தகத்தையே நம்பியிருக்கிறது, இது இப்போதெல்லாம் வடக்கே 420 கிமீ தொலைவில் உள்ள சுரங்கங்களிலிருந்து உப்புத் தொகுதிகளைக் கொண்டு செல்வதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அரௌனே வெப்பமான பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது, இது டோம்போக்டோ பிராந்தியத்திற்கு பொதுவானது. இது சகாரா பாலைவனத்தின் மேற்குப் பகுதியிலுள்ள வெப்பமான பகுதிகளில் ஒன்றாகும். சராசரி ஆண்டு மழைப்பொழிவு அரிதாகவே 45 மிமீ  பொழியும், ஆனால் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் மாறுபடும் மற்றும் பெரும்பாலும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் விழும். ஆண்டு சராசரி வெப்பநிலை சுமார் 29 °C (84.2 °F) ஆகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் சராசரியாக அதிகபட்சம் 42.8 °C (109 °F) ஐத் தாண்டி, 46.6 °C (115.9 °F) என்ற உச்சநிலையை அடைகிறது.இது பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும்.

எங்களைக் கடந்து செல்லும் சொற்ப மேகங்கள் எங்கள் மீது மழைப் பொழியாத என்ற ஏக்கத்தில் எங்களின் ஒவ்வொரு நாளும் பல வருடங்களாக நகர்ந்தன. அவ்வப்போது செல்லும் கார்மேகங்கள் ஆங்காங்கே பன்னீர்த்துளிகளை சிந்திச் செல்லும், அதுவும் நாங்கள் வீட்டினுள்ளே இருந்து வெளியில் வருவதற்குள் கரைந்துவிடும். எங்கள் பகுதியைச் சுற்றியுள்ள நீராதாரங்களும் மிகவும் குறைவு, மேகங்கள் மழைப் பொழிந்தால் மட்டுமே அவை நிரம்பும், இல்லையேல் அன்றாட வாழ்க்கை என்பது மிகவும் கடினம்.பாலைவனப் பகுதியென்பதால் அவ்வளவாக மரங்களும் இங்கே வளராது. உணவு, நீர் போன்ற அனைத்திற்கும் நாங்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அவ்வப்போது வர்த்தகத்திற்கு வரும் வாகனங்களில் எங்களுக்கு நீர், உணவு போன்ற பொருள்கள் வந்து சேரும். கல்விப்படிப்பிற்கு நாங்கள் நெடுந்தூரம் பயணித்து அங்கேயேத் தங்கி கல்விக் கற்கிறோம். பின்பு பணிக்குச் சென்றபின் எங்களால் முடிந்த உதவியை கிராம மக்களுக்கு செய்கிறோம். இது எங்களின் பூர்வீக வசிப்பிடம் என்பதால் எவ்வளவு இன்னல்கள் வந்தபோதும், இவ்விடத்தைவிட்டு மக்கள் வெளியேற விரும்பவில்லை. எனினும் சொற்ப மழைப்பொழிவு, வறட்சி காரணமாக 1000 மக்கள் வாழ்ந்த இக்கிராமத்தில் தற்பொழுது 300 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர், மற்ற அனைவரும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து விட்டனர். இங்கு தற்பொழுது வாழும் மக்கள் என்றாவது ஒருநாள் அவர்களின் தலைமுறை இந்த சகாராவிலுள்ள அரௌனே கிராமத்தில் பாலைவனம் நீங்கி பசுமையோடு வாழும் என்ற நம்பிக்கையில் தான் தங்களின் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார்கள். அந்த நம்பிக்கையின் விளைவாக பிறந்ததே எனது பெயர், டெங். இது ஆப்பிரிக்க மக்களின் மழைக் கடவுளின் பெயராகும்.

ஓர் பாலைவனப் பகுதியில் வாழ்ந்து வந்த எனக்கு இந்த மேகாலயாவிலுள்ள மௌசின்ரம் பகுதி ஒரு சொர்கமாகவே உள்ளது. இங்கேயே குடிபெயர்ந்து விடலாம் என்றுகூட தோன்றுகிறது; என்று மழையுடன் கொண்ட தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தார் டெங். தாங்கள் மேகங்களோடும், மழையோடும் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்த இருவரும், ராகவ் அவற்றோடு  கொண்ட உறவை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தனர்.

ராகவ், தற்பொழுது இவர்கள் தங்கியிருக்கும் மௌசின்ரமின் சோரா பகுதியிலிருந்து 16கிமீ தொலைவிலுள்ள, உலகின் அதிகமாக மழைபொழியும் இரண்டாவது இடமான சிரபுஞ்சியிலிருந்து வருகிறார். இவரது மூதாதையர்கள் மேகலாயாவின் பலப்பகுதிகளில் வசித்து வந்தனர்,பிறகு இடம்பெயர்ந்து கடந்து ஒரு நூற்றண்டாக இவர்கள் சிரபுஞ்சியில் வசிக்கின்றனர். 

ராகவ்:

வருடத்தின் அனைத்து மாதங்களும் இங்கே மழை, மழை, மழை, மட்டும்தான்!  மரங்களின் மீது தவழ்ந்து வரும் மேகங்களை தொட முயற்சிக்கும் குழந்தைகளின் விளையாட்டு மிகவும் ரசிக்கும்படி இருக்கும். மேகங்களைத் தொடும் பொழுது விண்ணையே கையில் ஏந்தும் ஓர் அலாதியான இன்பம் அது. டெங், நீங்கள் மேகங்களுக்கும், மழைப்பொழிவிற்கும் ஏங்குவது போல, நாங்கள் பெரும்பாலும் வெயிலுக்கு ஏங்குகிறோம், சூரியன் சற்றே மேகத்தைக் கிழித்துக்கொண்டு வந்து பிரகாசமான தனது கதிர்களைக் கொண்டு இப்பகுதியை வெப்பப்படுத்தத்தா என்று நாங்கள் ஏங்கிய நாட்களே அதிகம். பார்வதி, நீங்கள் மழை, வெயில், பனி, இலையுதிர் காலமென ஆண்டின் அனைத்து பருவநிலைகளையும் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இங்கே என்றும் எப்பொழுதும் ஒரே காலநிலை தான், மழைக்காலம். வருடம் முழுவதும் மழைப்பொழிவு இருப்பதால் அடிக்கடி ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன, எனவே, இங்கு அதிக நாட்கள் மின்வெட்டு ஏற்படும், மரக்கட்டைகளை வைத்தே மக்கள் வீட்டினுள் குளிர் காய்கின்றனர், அதுவும் பல நேரங்களின் ஈரமாகி சிரமத்தை ஏற்படுத்தும். இது அன்றாட வாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது. சிரபுஞ்சியில் சாதாரணமாக மக்கள் ஒரு மூங்கில் கூடையின் கீழ் (போலோ என்று அழைக்கப்படும்) கரி நெருப்பை வைத்து, கூடையின் மேல் ஈரமான மற்றும் ஈரமான ஆடைகளை உலர வைக்கிறார்கள். சிரபுஞ்சியில் பல ஆண்டுகளாகப் பெய்த மழைப்பொழிவுத் தரவுகளைப் படிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10ஆம் தேதி முதல் பருவமழைக்கு முந்தைய மழை சிரபுஞ்சியில் வந்து சேரும். இங்கே, விவசாயம் ஒரு தொழிலாக இல்லாததால், வாழ்க்கை வழக்கம் போல் செல்கிறது, ஆனால் அதிக நேரம் வீட்டிற்குள் சூடான கரி நெருப்பைச் சுற்றி செயலற்ற நிலையில் இருக்கின்றோம். எங்களைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல பகுதிகள் என இருந்தாலும், பெரும்பாலும் அவற்றை வெளியில் சென்று காணமுடிவதில்லை. இதன் இயற்கை அழகைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் மறக்கமுடியாத ஓர் அங்கமாக இவ்விடம் இருக்கின்றது. இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாப் பயணிகளையும், மலைப்பகுதிகளில் விளையும் மூலிகைகள், தாவரங்கள், மருந்துகளையும், சில கைவினைப் பொருள்களை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதில் உள்ளது.


இவ்வாறு தொடர்ந்து மழைப் பொழிவதால் எங்களால் எந்த விழாக்களையும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடிவதில்லை, முக்கியமாக தீபாவளி, இந்தியாவின் மிக சிறப்பானப் பண்டிகைகளில் ஒன்று. வான வேடிக்கைகளையும், வெடிகளையும் வெடிக்க முடியாமல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  மனவருத்தமும், வேடிக்கையான குறும்பும் கொண்ட அந்த நாட்கள் இருக்கவே செய்கிறது. எனினும் நாங்கள், அந்த நேரத்தை குடும்பத்துடன் அன்போடும், ஆனந்தத்தோடும் செலவிடுகிறோம். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் தொலைந்து போகின்ற உறவுகளின் நடுவே, இயற்கை எங்களை ஒன்று சேர்க்கிறது என்ற பெருமையும், நன்றியும் என்றுமே இந்த சிரபுஞ்சியைச் சேரும். 


இப்படியாக இவர்களின் உரையாடல் நடந்து முடிந்தது, ஒவ்வொருவரும் மற்றவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளையும், மழையால் அவர்கள் பார்த்து, அனுபவித்த நன்மைகளையும், இக்கட்டான சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டனர். இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வை காலநிலை மாற்றங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மூவரும் உணர்ந்தனர். உரையாடல் முடியும் தருவாயில், கார்மேகங்கள் மெல்ல நகர்ந்தன,இருள் மெல்ல விலகியது, புது வெளிச்சம் வந்தது, வானொலியில் மழை மேகங்கள் என்றும் போல் இல்லாமல் இன்று தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்றன, எனவே மக்கள் நாளையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்ற செய்தி வந்தது. மூவரும் நிம்மதியாக அடுத்த நாளைக்கான காலநிலை மாநாட்டிற்கு தங்களைத் தயார் செய்து கொண்டு, உறங்க அவர்களின் அறைகளுக்கு சென்றனர். ராகவ் மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்த நாளைக்கான சூரியனை வரவேற்கக் காத்திருந்தார், அதே சமயம் டெங்- விற்கு சகராவின் சிறு கிராமத்தில் வசித்து வரும் அவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, 5 வருடங்களாக மழைபொழிவே இல்லாத நமது கிராமத்தைச் சுற்றி எங்கும் கார்மேகங்கள் சூழ்ந்துள்ளன, இன்று நல்ல மழை பெய்யப்போகிறது என்று அவரின் தாயார் மகிழ்வோடு கூறினார்.இதைக்கேட்டு ஆனந்தம் கொண்ட டெங், தனது பெயருக்கான பலன் இன்று இறைவனின் அருளால் இயற்கையின் வழியே கிடைத்தது என்று உளம் பூரித்து இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்று தெரிவித்து உறங்கச் சென்றார், அன்றைய இரவு ஆனந்தமாக உறங்கியது!

கார்மேகங்களின் பயணம் தொடரும்...