Tuesday, February 13, 2018

மழைக்காடுகள்!






இப்பூமியின் மொத்த அழகையும் 
இஞ்ஞாலத்தின் ஞானம் அனைத்தையும் 
தன்னுள் கொண்டவளே!

ஞானிகளும் தேடிச்செல்லும் 
அமைதியின் உறைவிடம் நீயன்றோ!

விலகிச்செல்லும் மேகங்களையும்  
தன் பச்சைநிறக் கம்பளத்தால் 
கவர்ந்திழுப்பவளே!

கார்மேகங்களின் மீது
நீ கொண்ட காதலால் 
உருகியதோ! அம்மேகக்கூட்டங்களும் 
மழைத்துளிகளாக!

மௌனமாய் மழைத்துளிகளும் 
உன்னில் மோட்சமடைய,
மண்ணி லுறங்கிய விதைகளும் 
உயிர்ப்பெற்றனவோ!

பல உயிர்களின் 
உறைவிடமாய் இருப்பவளே,
நானும் உன்னில் பிறக்கவே 
ஆசைக் கொண்டேன்!

சிறுதுளி நீர்த் தேக்கத்தால் 
சிறகை யுலர்த்தும் 
சிறு பறவையாய !

பல வண்ணங்களை  யேந்தி 
உம்மை வலம்வரும் ஒரு 
வண்ணத்துப்பூச்சியாய்!

மரத்தின் உச்சியில் 
காற்றுடன் போராடி தன் 
குஞ்சுகளை அடைகாக்கும் 
சிறு பறவையின் இறகாய்!

பல்வேறு வண்ணங்களில் 
உம்மை அலங்கரித்து 
உமக்கு மணம் சேர்க்கும் 
வண்ண மலர்களாய்!

ஆங்காங்கு உம்மைப் 
பற்றிக்கொண்டு  வளரும் 
படர்க்கொடியாய் !

ரீங்காரமிட்டு தேனைத் 
தேடிச்செல்லும் வண்டுகளாய்!  
ஓய்வின்றி உழைக்கும் 
சிறு எறும்புகளாய் !

தனக்கில்லை யென்றறிந்தும் 
பூக்களைத் தேடித்  தேனை
சேர்க்கும் தேனீக்களாய்!

உம்மில் பிறக்கும் 
தெளிந்த நீரோடையாய்!
நீரோடையில் நீந்தும் 
அழகிய மீன்களாய்!

உன்னில் நித்தமும் 
உருகி கரைகிறேன்!

சூரியனும் வர அஞ்சும் 
உன் உறைவிடம் தேடி,
இவள் மனம் செல்ல!

உனதழகில் இவளும் ஏனோ 
தன்னைத் தொலைத்தாள்!

பெ.திவ்யா





No comments:

Post a Comment